இறந்த தந்தையின் முன் மகன் திருமணம்: கிராமமே சோகமயம்..!!!
உடல்நலக்குறைவால் தந்தை திடீரென உயிரிழந்த நிலையில் தந்தையின் சடலம் முன்பாக மகன் கண்ணீர் மல்கத் திருமணம் செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை (16.04.2025) தமிழ்நாடு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அமைந்துள்ள கவணைக் கிராமத்தில் நடந்துள்ளது.
மேற்படி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு அப்பு என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக செல்வராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உடல்நலக் குறைவால் காலமானார். தந்தை மறைவையடுத்துக் கதறி அழுத அப்பு அவரது சடலத்தின் முன் நின்று கண்ணீர் மல்கத் தான் நான்கு வருடங்களாகக் காதலித்து வந்த விஜயசாந்தி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து தந்தை, தாயின் பாதங்களைத் தொட்டு இருவரும் ஆசி பெற்றனர்.
இதன்பின்னர் செல்வராஜின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. குறித்த சம்பவத்தால் கிராமமே சோகமயமானது.