
கனேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் இராணுவ கமாண்டோ சிப்பாயோ அல்லது புலனாய்வு அதிகாரியோ அல்ல என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுக்கடை நீதிமன்றத்திற்குள் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார் தற்போது வழக்கறிஞர் வேடத்தில் வந்து கொலை செய்த நபர் பற்றிய தகவல்களை கண்டுபிடித்துள்ளது.
அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸ, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்றவர் என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் நேற்று பிற்பகல் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டவுடன் பல உண்மைகளை பொலிஸார் வெளிக்கொணர முடிந்துள்ளது.
அவர் தொடர்பாக சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், புத்திக மனதுங்க, புத்தளம் பாலவிய பகுதியில் கைது செய்யப்பட்ட இந்த நபர் பல பெயர்களில் தோன்றிய ஒருவர் என தெரிவித்தார்.
அவர் தன்னிடம் பல அடையாள அட்டைகள் இருப்பதாகவும், அதில் ஒரு வழக்கறிஞராக பணிபுரிவதைக் குறிக்க தயாரிக்கப்பட்ட ஒரு வழக்கறிஞரின் அடையாள அட்டையும் அடங்கும் என கூறினார்.
அவர் முதலில் முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற பெயரிலும் தோன்றினார், பின்னர் சமிது தில்ஷான் பியுமங்க கந்தனஆராச்சி என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.
கோடிகரகே கசுன் பிரபாத் நிஸ்ஸங்க என்ற பெயரைக் கொண்ட போலியான வழக்கறிஞர் அடையாள அட்டையையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவினால் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதற்கமைய, எதிர்கால விசாரணைகளில், இந்த சந்தேக நபர் மற்றும் கனேமுல்ல சஞ்சீவவின் கொலையில் அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த அனைவரையும் பற்றிய உண்மையான தகவல்களை வெளிக்கொணர முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.