யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து தாய் மாமனும் மருமகனும் நேற்றைய தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை தெற்கை சேர்ந்த பெருமாள் மகிந்தன் (வயது 30) என்பவரும் , அவரது தங்கையின் மகனான தனுஷன் டனுசன் (வயது 03) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த மகிந்தன் தனது மனைவி, தங்கை மற்றும் தங்கையின் மகனுடன் துணைவி பகுதிக்கு இரண்டு துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளனர்.
இவர்கள் வீடு திரும்பும் போது மகிந்தனும் , அவரது தங்கையின் மகனும் ஒரு துவிச்சக்கர வண்டியில் முன்னால் சென்றுள்ளனர். பின்னால் மனைவியும் தங்கையும் வந்துள்ளனர் .
பின்னால் வந்த இருவரும் வீதியில் மகிந்தனின் துவிச்சக்கர வண்டியை அவதானித்து , அவர்களை தேடிய போது ,மூன்று வயது சிறுவன் சடலமாக கிணற்றில் மிதப்பதை கண்ணுற்று , தாயார் கதறியதை அடுத்து , அயலவர்கள் கூடி சிறுவனை மீட்டு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
தொடர்ந்து சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு , உயிரிழந்த சிறுவனின் மாமனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது , தாய்மாமன் கிணற்றினுள் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
அவரது சடலத்தை மீட்டு போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிணற்று கட்டில் தாய் மாமனின் பாதணிகள் இருப்பதனால் , இருவரும் கிணற்றினை பார்க்க முற்பட்ட வேளை தவறி கிணற்றினுள் விழுந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.