Wednesday 3 July 2024

நயினாதீவு கடலில் படகு விபத்து - கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு..!!!

SHARE
யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருள்கள் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த கோபி என அழைக்கப்படும், இந்திரலிங்கம் அருண் என்ற 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

குறிகட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பொருள்கள் ஏற்றி இறக்கலில் ஈடுபட்ட படகு ஒன்று நான்கு தொழிலாளர்களுடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், படகில் பயணித்த நால்வரும் கடலில் வீழ்ந்தனர்.

அவர்கள் கரை நோக்கி நீந்திய வேளை, கிராம மக்களின் உதவியுடன் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றையவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.


உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE