Monday 11 March 2024

மரதன் ஓடிய மாணவன் திடீரென உயிரிழப்பு ; வைத்தியசாலையின் முன் பதற்றம்..!!!

SHARE

அம்பாறை - திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவன் ஒருவர் மரணித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.

திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இன்றைய தினம் காலை மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட குறித்த மாணவன் போட்டி நிறைவுற்றதும் வகுப்பறைக்கு சென்றுள்ளார். இதன்போது வயிற்றுக்குள் கொழுவி பிடிப்பதாகக் கூறி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றதாகவும் பின்னர் அவசர சிகிச்சைக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அவருக்கான சி.பி.ஆர் சிகிச்சை உட்பட போதியளவான சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டதாகவும் எனினும்; போதிய வைத்திய உபகரணங்களைக் கொண்ட அம்பியூலன் வண்டி இல்லாததன் காரணமாக அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்ற முடியாமல் போனதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த மாணவனின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வான நிலையில் மாணவனின் உயிரிழப்புக்கு வைத்தியசாலையின் கவனயீனமே காரணம் என மாணவர்களும், இளைஞர்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் உட்பட படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
SHARE