Friday 12 January 2024

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம்: மோதலில் பலர் காயம் - தப்பியோட்டம்..!!!

SHARE



கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளனர். மேலும் சுமார் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் கைதிகளில் இரண்டு குழுக்களுக்கு இடையில் உணவுப் பிரச்சினை தொடர்பாக இன்று மதியம் மோதல் ஏற்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மோதலின் போது கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து சுமார் 60 கைதிகள் தப்பிச் சென்றதாகவும் அவர்களில் 25 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெலிகந்த பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் சமந்த ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தப்பியோடிய ஏனைய கைதிகளை கைது செய்வதற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து விசேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய ஏனைய கைதிகளை கைது செய்யும் நடவடிக்கைக்கு சோமாவதிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு இடையூறாக இருப்பதாக சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம்  உணவு வரிசையில் காத்திருந்த இருவருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு கற்கள் மற்றும் தடிகளால் தாக்கியதாக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் காரணமாக வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில கைதிகள் பலத்த காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெலிகந்த வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
SHARE