Sunday 14 January 2024

பிக்பாஸ் சீசன் 7: வரலாற்றை மாற்றியெழுதி… டைட்டில் வின்னராக மகுடம் சூடிய அர்ச்சனா..!!!

SHARE

கடந்த 106 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இன்று (ஜனவரி 14) இறுதிக்கட்டத்தை எட்டியது. வைல்டு கார்டுடன் சேர்த்து மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று (ஜனவரி 14) நடைபெற்றது.

இதில் பவா செல்லத்துரை, யுகேந்திரன், ஐஷு, பிரதீப் ஆண்டனி ஆகிய நான்கு பேர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் நால்வரை தவிர மீதமுள்ள அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.

தொகுப்பாளர் கமல்ஹாசன் கருப்பு நிற ஆடையில் கலந்து கொண்டு அசத்தினார். இன்றுடன் பிக்பாஸ் முடிவதால் பிக்பாஸும் கொஞ்சம் பீலிங் கலந்தே பேசினார்.

கானா பாலா, நிக்ஸன் இருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களை கிண்டலடித்து பாட்டுப்பாடி அசத்த, நிகழ்ச்சி களைகட்டியது. டாப் 5 போட்டியாளர்களான மாயா, அர்ச்சனா, மணிசந்திரா, தினேஷ், விஷ்ணு விஜய் ஆகிய ஐவரில் இருந்து தினேஷ், விஷ்ணு எவிக்ட் செய்யப்பட்டனர்.

இதையடுத்து மாயா, அர்ச்சனா, மணிசந்திரா மூவரும் எஞ்சினர். இதில் மாயா 3-வது இடத்தை பிடித்தார். கடைசியில் அர்ச்சனா, மணிசந்திரா இருவரில் யார் அந்த வின்னர்? என்ற கேள்வி எழுந்தது.

நாம் முன்னரே சொன்னது போல அர்ச்சனா டைட்டிலை கைப்பற்றி வெற்றிவாகை சூடினார். மணிசந்திரா ரன்னராக இரண்டாவது இடம் பிடித்தார்.

இதன் மூலம் பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாமல், முதன்முறையாக வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர் மகுடம் சூடியுள்ளார்.

ஆரம்பம் முதலே பிரதீப் ஆண்டனி டைட்டில் வின்னராக பார்க்கப்பட்ட நிலையில், அவர் பாதியிலேயே வெளியேறியதால் யாரும் எதிர்பாராதவிதமாக அர்ச்சனா டைட்டிலை வென்றுள்ளார்.

உள்ளே வந்த 77 நாட்களில் சுமார் 80 லட்சம் மதிப்புள்ள பணம், பரிசுத்தொகை ஆகியவற்றை அர்ச்சனா வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE