Wednesday 13 December 2023

இரண்டாம் தவணை கொடுப்பனவிற்கு IMF அனுமதி..!!!

SHARE

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையுடன் இணக்கம் காணப்பட்டுள்ள 48 மாதங்களுக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வு, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையில் நேற்றிரவு(12) நிறைவடைந்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை கொடுப்பனவாக இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி அனுமதி வழங்கியது.

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த கடன் வசதி வழங்கப்படுகிறது.

இந்த கடன் வசதியின் முதலாவது தவணை கொடுப்பனவாக 330 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது.

இரண்டாம் தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளதால், மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை கடந்து, நிவாரண பொருளாதார வலயத்திற்குள் உள்நுழைவதற்கான இயலுமை கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தமது X பதிவில் தெரிவித்துள்ளார்.
SHARE