Friday 29 December 2023

யாழில் பெய்யும் மழையே டெங்குக்கு காரணம் - டிசம்பரில் மாத்திரம் நால்வர் உயிரிழப்பு..!!!

SHARE


யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடரும் அசாதரணமான மழை வீழ்ச்சியே டெங்கு தொற்றின் தாக்கம் அதிகரிப்பதற்கு காரணம் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் டெங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை சிறிய நீர் உள்ள இடங்களிலும் டெங்கு நுளம்பு பெருகும் நிலை காணப்படுகின்றது கடந்த இரண்டு மாதங்களிலேயே தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தாக்கத்துக்குள்ளாகும் நோயாளியை சீராக கண்காணித்து வந்தால் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதால் கண்காணிப்பதில் சற்று பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இதனால் மரண வீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக டிசம்பர் மாதத்தில் மட்டும் டெங்கு தொற்றால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இதேநேரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் நான்கு பிரதேச வைத்தியசாலையிலும், இதற்கான சிகிச்சை முன்னெடுப்பதற்கான அனைத்து வசதிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் விசேட விழிப்பூட்டல், மக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது யாழ் போதனா வைத்தியசாலையில் இரு விடுதிகள் இதற்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டள்ளதுடன் அதனை கண்காணிப்பதற்காக 60 வைத்திய மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை டெங்கு உதவியாளர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனை நிவர்த்தி செய்ய பணியாளர்களாக பயிற்சிபெற்ற 53 பேரையும் நிரந்தரமாக்குவதனூடாக ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என மேலும் தெரிவித்தார்.
SHARE