Friday 8 December 2023

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை - சந்தேகநபர்களை அடையாளம் காட்டிய சாட்சி..!!!

SHARE


வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சந்தேகநபர்களான நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் வழக்கின் பிரதான சாட்சி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அடையாளம் காட்டியுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு போலீஸ் உத்தியோகஸ்தர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, நடைபெற்ற அடையாள அணி வகுப்பில் வழக்கின் பிரதான சாட்சியான , கொலையான இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் மன்றில் தோன்றி சந்தேகநபர்களை அடையாளம் காட்டினார்.

அதனை தொடர்ந்து நான்கு சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு நீதவான் நீடித்து உத்தரவிட்டதுடன், வழக்கினையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.
SHARE