Friday 3 November 2023

'நல்லூரான் கட்டியம்' புகழ் விஸ்வ பிரசன்ன சிவாச்சாரியாருக்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து..!!!

SHARE

நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர்களில் ஒருவரான 'நல்லூரான் கட்டியம்' புகழ் விஸ்வ பிரசன்ன சிவாச்சாரியாரை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழ்ந்து பாராட்டினார்.

இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ளிக்கிழமை (03) நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது, அங்கு கூடியிருந்தவர்களிடம் நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகரின் பெயர் என்ன என்று கேட்க, அங்கிருந்தவர்கள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இறைப்பணி ஆற்றும் விஷ்வ பிரசன்ன சிவாச்சாரியாரை பற்றி கூறியுள்ளனர்.

அதற்கு அவர், "விஸ்வ பிரசன்ன சிவாச்சாரியார் உலகளவில் தற்போது ஹீரோ" என தெரிவித்ததோடு, நல்லூர் ஆலய மஹோற்சவத்தின்போது சிவாச்சாரியார் கட்டியம் கூறுவதையும் புகழ்ந்து பாராட்டினார்.

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் 25 நாள் மஹோற்சவத்தின்போது நடைபெறும் ஒருமுகத் திருவிழா - வேட்டை திருவிழாவில் விஸ்வ பிரசன்ன சிவாச்சாரியார் கட்டியப் பொல் பிடித்தபடி உரத்த குரலில் சொன்ன "ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமான் மகா ராஜாதிராஜ ராஜ கம்பீர ராஜ மார்த்தாண்ட...." என தொடங்கும் கட்டியம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி, இலங்கையில் மட்டுமன்றி கடல் கடந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஒலிக்கின்றமை இலங்கை மண்ணுக்கே உரிய பெருமை என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
SHARE