Tuesday 21 November 2023

நினைவேந்தும் உரிமையை தடுக்க முடியாது - மல்லாக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

SHARE

உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமையை தடுக்க முடியாது என மல்லாக நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (20) தீர்ப்பு வழங்கியுள்ளது.

தெல்லிப்பழை மற்றும் அச்சுவேலி பொலிஸாரால் நினைவேந்தல்களை தடை செய்யுமாறு கோரி மூன்று நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு ஏற்கனவே மல்லாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

குறித்த விண்ணப்பம் தொடர்பான கட்டளையை நேற்று திங்கட்கிழமை வழங்கிய நிலையில் குறித்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகளில் ஒருவரான சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கருத்துத் தெரிவிக்கையில்,

நினைவேந்தலை தடுப்பதற்கு பொலிசார் மேற்கொண்ட சதி முயற்சிக்கு எதிராக மல்லாக நீதிமன்றம் சிறந்த ஒரு தீர்ப்பை வழங்கியதோடு நினைவேந்துவதற்கான உரிமையையும் பாதுகாத்துள்ளது.

மல்லாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நினைவேந்தல் உரிமையை தடுக்க முடியாது தேசிய பாதுகாப்பு பங்கம் ஏற்படும் வகையில் யாராவது செயற்பட்டார்கள் எனப் பொலிஸார் கருதினால் வழங்கப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

மேலும் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடுபவர்கள் தேசிய பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொது மக்களுக்கு இடையூறு இன்றி நினைவேந்தல்களில் ஈடுபட வேண்டும் என நீதிமன்றம் தனது கட்டளையில் கூறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE