Friday 3 November 2023

திருமணமான 3 நாளில் காதல் ஜோடி கொலை: பெண்ணின் தந்தை கைது..!!!

SHARE

இந்தியா
- தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் பெண்ணின் தந்தையை காவல்துறையினர் இன்று (நவம்பர் 3) கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி முருகேசன் நகரில் வசித்து வருபவர் வசந்தகுமார். இவரது மகன் மாரிசெல்வம் (23) ஷிப்பிங் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். மாரிசெல்வமும் தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகாவும் (23) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

காதலுக்கு எதிர்ப்பு

இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் மாரிசெல்வம் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர் என்பதால் கார்த்திகாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாரிசெல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரையும் கார்த்திகாவின் குடும்பத்தினர் மிரட்டி வந்துள்ளனர். இதனால் திருவிக நகர் பகுதியில் வசித்து வந்த மாரிசெல்வம் குடும்பத்தினர் கடந்த ஓராண்டிற்கு முன்பு தான் முருகேசன் நகருக்கு குடியேறியுள்ளனர்.

திருமணமான 3 நாளில் கொலை

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு (அக்டோபர் 30) தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவில்பட்டியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பி மாரிசெல்வம் வீட்டில் அவரது தாய் தந்தையுடன் ஒரே வீட்டில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாரிசெல்வம் மற்றும் கார்த்திகா இருவரும் வீட்டில் தனியாக இருந்த போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதனை அறிந்த மாரிசெல்வத்தின் பெற்றோர் கதறி அழுதனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்ணின் தந்தை கைது

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொலை செய்து விட்டு தப்பிச் சென்றவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கார்த்திகாவின் உறவினர்களுக்கு இந்த கொலையில் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம், உறவினர்கள் கருப்பசாமி, பரத் ஆகிய 3 பேரை காவல்துறையினர் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான மூன்றே நாளில் காதல் தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
SHARE