யாழில் 402 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் தெரிவுக்காக 4111 பேர் போட்டி..!!!
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் என யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார்
யாழ்ப்பாண தேர்தல் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இம்முறை போட்டியிடுகின்ற கட்சிகள்,சுயேட்சை குழுக்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கிற செயற்பாடு முடிவுறுத்தப்பட்டுள்ளநிலையில் இந்த முறை தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.
13 அரசியல் கட்சிகள் சார்பில் 135 வேட்புமனுக்களும் 15 சுயேட்சை குழுக்கள் சார்பில் 15 வேட்புமனுக்களுமாக 150 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு தேர்தலுக்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த முறை தேர்தலில் வாக்களிப்பதற்கென யாழ் மாவட்டத்தில் 4 இலட்சத்து 86 ஆயிரத்து 423வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 514 வாக்களிப்பு நிலையங்கள் யாழ் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறை உள்ளுராட்சி மன்ற சட்டத்திற்கு இணங்க அந்தந்த வட்டாரங்களிலே வாக்குகள் எண்ணப்பட்டு வட்டாரங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளோம். அந்த வகையிலே 243 வாக்கு எணணும் நிலையங்கள் யாழ் மாவட்டம் முழுவதுமாக அமைக்கப்படவுள்ளன.
எனவே அந்த 243 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வட்டார தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பின்னர் மாவட்ட ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படுகிற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொத்தமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமாக வட்டார அடிப்படையில் 243 உறுப்பினர்களும் கட்சிகள் பெற்றுக் கொள்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிந்து அனுப்பப்பட வேண்டிய 159 வேட்பாளர்களுமாக 402 உறுப்பினர்கள் 17 சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட வேண்டிஇருக்கின்றது
இந்த 402 உறுப்பினர்கள் தெரிவிற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 4111வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 13 கட்சிகள் சார்பில் 3686 வேட்பாளர்களும் 15 சுயேட்சை குழுக்கள் சார்பாக 425 வேட்பாளர்களுமாக 4111 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளார்கள். இதன் அடிப்படையில் மொத்த வாக்காளர் தொகையிலேயே 0.85 வீதமான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.