Monday, 14 February 2022

கச்சத்தீவு செல்லும் பக்தர்கள் மூன்று தடுப்பூசிகளும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் - யாழ்.அரச அதிபர்..!!!

SHARE

எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள கச்சதீவுத் திருவிழாவில் பங்கு கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை 500 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு செல்வோர் கட்டாயம் தடுப்பூசிகளை பெற்றிருக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

கச்சதீவு திருவிழா தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

கச்சத்தீவு தேவாலய உற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11.ஆம் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்களை பொறுத்த வரையில் கொரோனா சுகாதார நடைமுறைகளை கருத்தில் கொண்டு உள்ளூர் பக்தர்கள் 500 பேர் கலந்து கொள்ளலாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியா பக்தர்களும் கலந்து கொள்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது .
அந்த வேண்டுகோள் முறைப்படி உரிய மட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கலாசார அமைச்சுடன் தொடர்பு கொண்ட போது நாம் ஏற்கனவே தீர்மானித்ததன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கும்படி எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய பக்தர் பற்றி எந்தவிதமான இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

500 பக்தர்களுடன் உற்சவத்தை நடாத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

கலந்து கொள்பவர்கள் பூஸ்டர் டோஸ் உட்பட கொரோணா தடுப்பூசி மூன்று டோசும் பெற்று இருக்க வேண்டும் அதற்குரிய ஆதாரத்தை தம்வசம் வைத்திருக்க வேண்டும். தமது பெயர் விபரம் செல்ல உள்ள படகு இலக்கம் உட்பட பதிவு செய்து தெளிவாக விண்ணப்பிக்கும்போது அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதனை அந்த அந்த பங்கிற்குரிய குருவானவருடன் கலந்துரையாடி எடுக்க வேண்டும். அது பற்றிய அறிவிப்பு பேராயர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
உற்சவம் தவிர வியாபார சேவைகள் இதர செயற்பாடுகள் போன்றன தடை செய்யப்பட்டுள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சுகாதார நடைமுறையுடன் இறுக்கமான கண்காணிப்பு நடவடிக்கையுடன் இந்த உற்சவம் நடைபெறவுள்ளது என்றார்.

யாழ்.தர்மினி
SHARE